மழை 
தமிழ் நாடு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கு கனமழை பெய்யும்?

Staff Writer

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை 5.30 மணி அளவில், ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. "இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 26) மற்றும் நாளை (ஆகஸ்ட் 27) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸ் ஆகவும் இருக்கும்.