த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கூட்டத்தில் சி.பி.ஐ. பங்கேற்காது என்று அக்கட்சியின் செயலர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுக் கட்சிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
த.வெ.க.வின் முதல் கூட்டத்தில், சி.பி.ஐ., சி.பி.எம்., ஆகிய இரு கட்சிகளுக்கும் கலந்துகொள்ளாத நிலையில், இரண்டாவது கூட்டத்திலும் சி.பி.எம்., சி.பி.ஐ. பங்கேற்காது என்று அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சி.பி.ஐ. செயலர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
”த.வெ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க வேண்டும் என்று நேரில் வந்து அழைத்தார்கள். த.வெ.க.விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடர்கிறது.
மக்களதிகாரத்தின் மீது ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது. எனவே, மக்களதிகாரத்திற்கு மதிப்பளித்து, ஒரு மறைமுக பா.ஜ.க.வைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் த.வெ.க.வை ஆதரித்தோம்.
மதச்சார்பின்மை நீடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை.” என்று மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.