இந்தியாவின் இறையாண்மையையும், கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற வகையில் பா.ஜ.க., தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை :
"கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி பா.ஜ.க. கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது.
மீண்டும் தற்போதுள்ள எண்ணிக்கையோடு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என ஆசைகாட்டி புதிய மசோதாவை பா.ஜ.க. அரசு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.
இதன்படி பார்த்தால் உத்தரபிரதேச மாநிலத்தில் 80 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய திட்டத்தின்படி இது 120 ஆக உயரும். அதேபோல, தமிழ்நாடு 39 இல் இருந்து 58ஆக உயரும்.
உத்தரபிரதேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உண்டான இடைவெளி 41 இல் இருந்து 62 ஆக உயரும்.
ஒரு பன்முக கூட்டாட்சியில் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வெறும் எண்களின் விகிதாச்சாரத்தை கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது.
சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பு தொகுதி மறுவரையறை செய்தால் பட்டியலின, பழங்குடியின பெண்கள் இடஒதுக்கீட்டு தொகுதிகளை சரியாக தீர்மானிக்க முடியாது. ஒட்டுமொத்தத்தில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பறித்து விடும்." என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.