அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம் 
தமிழ் நாடு

3 முறை பேசியும் ம.தி.மு.க. - தி.மு.க. தொகுதிப் பங்கீடு இழுபறி - சின்னமும் பிரச்னை?

Staff Writer

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

கடந்த தேர்தலில் தி.மு.க. அணியில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் இரண்டு மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் வேண்டும் என ம.தி.மு.க. தரப்பில் கேட்கப்பட்டது. 

அத்துடன், கடந்த முறை ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க.வுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த முறை அப்படி போட்டியிடாமல், தங்கள் சொந்தச் சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. குழுவினர் மூன்றாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூன், தாங்கள் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். 

எந்தத் தொகுதி என உறுதியாகிவிட்டதா எனக் கேட்டதற்கு, எண்ணிக்கையே முடிவாகவில்லை; அதனால் அது முடிவான பிறகே சொல்லமுடியும்; இப்போது எதையும் வெளியிட்டுவிடாதீர்கள் என்றும் கூறி அர்ஜூன் ’நன்றிவணக்கம்’ என பேட்டியை முடித்துக்கொண்டார்.