மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அதன் முழுகொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் உபரி நீர் திறந்து விடுவதை சீரான முறையில் அனுப்பிடவும், அந்நீரினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் விவசாயிகளை நீர்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் 12.06.2025 அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிட்டார். அத்துடன், மேட்டூரிலிருந்து திறந்தவிடப்பட்ட நீர் 15.06.2025 அன்று கல்லணைக்கு வந்தவுடன், கல்லணை மதகுகளையும் திறந்து வைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகளை அறிவுறுத்தினார்.
முன்னதாக, இந்த ஆண்டு 98 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு விவசாயப் பணிகளின் தேவைகேற்ப ஜுன் 12 முதல் (28.06.2025) இன்று காலை வரை வினாடிக்கு 12,000 கனஅடி முதல் 26,000 கன அடி வரை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து அதன் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 70,000 கனஅடி முதல் 80,000 கனஅடி வரை அதிகரித்துள்ளது.
இன்று (28.06.2025) மாலை 4.00 மணி நிலவரப்படி81,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியினை இன்று இரவு அல்லது நாளை காலை எட்ட உள்ளது. இச்சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படவுள்ளது, இதற்கு தேவையான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கிடைக்கும் உபரி நீரை முறை சார்ந்த குளங்கள், ஏரிகள் மற்றும் சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு நீரை முடிந்த அளவு சேமிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையானது கடந்த நான்கு பாசன ஆண்டுகளில் 2021-2022, 2022-2023 மற்றும் 2024-2025-இல் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 2024-2025 ஆம் ஆண்டில் 30.07.2024, 12.08.2024 மற்றும் 31.12.2024 ஆகிய நாட்களில் முழுகொள்ளளவை (120.00 அடி) எட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர்வளத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.