திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக விழுந்து வழிபட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரையில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த அரசு நிகழ்ச்சிக்கு பிறகு அவர் முருகனின் முதல் அறுபடை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலின் உள்ளே சென்ற அவர் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். கோயிலில் அப்படியே சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து முருகனை தரிசனம் செய்தார். இதன்பிறகு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் முருகப்பெருமானின் புகைப்படமும் வழங்கப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி மதுரையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இரண்டு முறையும் அவர் உத்தரவிட்டும் மனுதாரர் ராம ரவிக்குமார் மலையில் தீபம் ஏற்ற தமிழக காவல்துறை மறுத்து விட்டது.
தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விடும் என தமிழக அரசு குற்றம்சாட்டி மறுப்பு தெரிவித்து விட்டது. தமிழகத்தில் மதக்கலவரம் செய்ய பாஜக முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டியது. இந்துக்களுக்கு விரோதமான திமுக அரசு மக்களின் மத வழிபாடுகளை தடுக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டி இருந்தது. கடந்த மாதம் மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலில் திமுக ஈடுபட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிப்பதில்லை'' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.