தெருநாய் (மாதிரிப்படம்) மெட்டா ஏஐ
தமிழ் நாடு

தெருநாய் பிரச்னையைத் தீர்க்க சொந்த சேமிப்பிலிருந்து 5 லட்சம் தரும் தமிழக எம்.பி.!

Staff Writer

தெருநாய் பிரச்னையைத் தீர்க்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருந்து இதை விடுவிக்கவேண்டும் என கரூர் எம்பி ஜோதிமணி கூறி உள்ளார். இதற்கென்று மாநில,மாவட்ட அளவில் தனி நிதி ஒதுக்கீடும், நிபுணத்துவம் கொண்ட தனி அமைப்பும் தேவை எனக் கூறும் இவர் இதற்காக தன் சொந்த சேமிப்பில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளார்.

உண்மையிலேயே தெருநாய் பிரச்சினையை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருந்து தெருநாய்களைக் கையாளும் பொறுப்பை விடுவிக்க வேண்டும். தினந்தோறும் தெருநாய்களை கையாள்வதற்குரிய நிதியோ, பணியாளர்களோ , நிபுணத்துவமோ,கருணையோ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. இதற்கென்று மாநில,மாவட்ட அளவில் தனி நிதி ஒதுக்கீடும், நிபுணத்துவம் கொண்ட தனி அமைப்பும் தேவை.

இத்துடன் தன்னார்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் இப்பிரச்சினையை திறம்படக் கையாள முடியும் . நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தங்குமிடங்களை அமைக்க முடியும்.

தெருநாய்களுக்கு ஊசி போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, உணவளிப்பது, நகர்/ ஊர்ப்புறங்களுக்கு வெளியே தங்குமிடங்களை உருவாக்குவது ( நிலம் ஒதுக்கீடு செய்வது அரசுக்கு ஒன்றும் சிரமமான விசயம் இல்லை) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் இப்பிரச்சினையை முழுவதுமாகத் தீர்க்க முடியும்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் நகர்ப்புற நிர்வாகத் துறையை தன்வசம் வைத்திருப்பதால் இதுகுறித்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அரசு இதை ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) ஏதேனும் ஒரு மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம். கரூர் மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம் என்கிற யோசனையையும் முன்வைக்கிறேன். இதற்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ 5 லட்சம் வழங்கவும் தயாராக உள்ளேன்.

மக்களை தினந்தோறும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினை குறித்து பேசிக்கொண்டே இருப்பதை விட தீர்வை நோக்கி நகர்வது அவசியம்.

உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் மாநில அரசுகள் உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இப்பணியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இப்பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியும்.