நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் துறைமுகத்தில் முதன்முறையாக 'டியூட்டி - ப்ரீ' விற்பனைக் கடைகளை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை வலுப்படுத்தவும், சர்வதேச தரத்திலான வசதிகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தச் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த சேவையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு தரமான வணிக வசதிகளை வழங்கும் நோக்கில் 'டியூட்டி - ப்ரீ' கடைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கடைகளில் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை, மத்திய அரசின் விதிமுறைகளின்படி, தகுதியுள்ள சர்வதேச பயணிகள் வாங்க முடியும்.
கடைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படவுள்ளன.
ஜூலை மாதத்தில் பணிகள் தொடங்கி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்தை சர்வதேச தரத்திலான பயணிகள் மையமாக மாற்றுவதுடன், இந்தியா – இலங்கை கடல்வழி சுற்றுலா, வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.