டாஸ்மாக் 
தமிழ் நாடு

மூடப்பட்ட டாஸ்மாக் மர்மங்கள்... வெள்ளையறிக்கை வெளியிடுமா விஜய் அரசு?

Staff Writer

“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்” என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறைகூறியுள்ளார்.

“மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற தகவல் உரிமைச் சட்டக் கேள்விக்கும் பதிலில்லை. விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு.

மொத்தத்தில் மூடப்பட்டதாகக் கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும், “அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்” என்றே ஒரே பதில் மட்டும்தான் கிடைக்கிறது. அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றைச் சேகரித்து ஆர்டிஐ மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்?

த.வெ.க. ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்குத் தயங்குகிறது?

உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என கேள்விகளை அடுக்கியுள்ள நயினார்,

”மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.” என்றும் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.