இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உட்பட்டோர் அடங்கிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவினர் தற்போதைய கல்வியில் தேவைப்படும் மாற்றங்களை ஆராய்ந்தது. மேலும், அக்குழு ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியது.
தற்போது அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1 முதல் 3ஆம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர புதிய பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
"புதிய பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் என். சுதந்திரமுத்து உட்பட 11 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்." என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி. சந்திரமோகன் கூறியுள்ளார்.