திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக – விளையாட்டுத் துறை அமைச்சராக – மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!”என தெரிவித்துள்ளார்.
வாழ்த்து பெற வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கன்னத்தில் முத்தமிட்டு பொன்னாடை போர்த்தி புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்