வேங்கைவயலில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்
வேங்கைவயலில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் 
தமிழ் நாடு

வேங்கைவயல் கிராமத்தில் முதல் கட்சியாக நாம் தமிழர் பிரச்சாரம்!

Staff Writer

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கு நுழைந்தது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு இராஜேஷ் இன்று முற்பகல் வேங்கைவயல் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க தன் கட்சியினருடன் சென்றார். 

ஏற்கெனவே அந்த கிராம மக்கள் ஓராண்டாக மலம் கலந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் அங்கு சென்றதும், அங்குள்ள காவல்துறையினர் வாகனங்களை ஊருக்குள் விட மறுத்தனர். 

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்களை பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதித்தனர். வேட்பாளர் இராஜேசுடன் நா.த.க. முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகனும் சென்றிருந்தார். 

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜேஷ் வாக்குறுதி அளித்தார். 

ஆனால், பிரச்சார வாகனத்தின் அருகில்கூட உள்ளூர் மக்கள் வரவில்லை. ஆங்காங்கே இருந்தபடி கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.