தமிழக முதலமைச்சர் விஜய், அடுத்த பிரதமராக வேண்டும் என்பது த.வெ.க.வினரின் ஆசை; அதை சீரியசானதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதைக் கூறினார்.
மேலும், அவர் கூறியாவது:
"சட்டப்பேரவை இலாவணிக் கச்சேரி மன்றமாக நடைபெற்று வருகிறது. அதில் மாறுதல் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியை சபாநாயகர் தரப்பில் அவர் மேற்கொள்கிறார். ஆனால், இரு தரப்பினரும் அதை ஏற்க மறுத்து வாதப் பிரதிவாதங்களை மேற்கொண்டு, மானியக் கோரிக்கைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சட்டமன்றத்தினுடைய நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்துவதில் மற்ற எல்லாரையும்விட ஆளும்கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது.
ஆகவே, அமைச்சர்கள் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிப்பது, குற்றச்சாட்டுகளை எழுப்புவது மிகமிகத் தவறானது.
ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் பதிவாவதைவிட நீக்குவது அதிகமாகிவிடக் கூடாது.
முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும் என்று த.வெ.க. கட்சியினர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறார்கள். இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஆனால், இந்தியா போன்ற பரந்த நாட்டில், ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் கட்சி உடனடியாக பிரதமராக வந்துவிடும் வாய்ப்பு இல்லை." என்று பெ. சண்முகம் கூறினார்.