ஆர்.என். ரவி  
தமிழ் நாடு

பாடத்திட்டத்தில் பறை இசை - ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தல்!

Staff Writer

பள்ளி பாடத்திட்டத்தில் பறையிசையை கொண்டு வரவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்ட மலையில், கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் இந்த மையத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கு ஆளுநரின் விருப்ப நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்த மையத்தின் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் இதில் ஆளுநர் ரவியும் கலந்து கொண்டார்.

அப்போது வேலு ஆசானுடன் இணைந்து ஆளுநர் ரவியும் பறை இசைத்து மகிழ்ந்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரம்பரிய இசை சங்க இலக்கியங்களில் போற்றப்பட்டுள்ளது.

இந்தப் பறை இசையை அதன் சிறப்பு குறையாமல் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு பறை இசையை கற்றுக் கொடுக்க வேண்டும்.

பள்ளி பாடத்திட்டத்தில் பறை இசை பற்றிய கல்வியை கொண்டுவர வேண்டும். அதோடு முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆளுநர் மாளிகையில் பறை இசையை அரங்கேற்றம் செய்ய நான் அழைப்பு விடுக்கிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டை கொண்டாடும்போது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உலகம் முழுவதும் பறையோசை கேட்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறினார்.