எதிா்க்கட்சியினரின் கடும் எதிா்ப்புக்கு இடையே, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, மசோதா நகலைக் கிழித்தெறிந்து முழக்கங்களை எழுப்பினா். அதன் காரணமாக, மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, புதிதாக ‘பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவை’ (விபி-ஜி ராம் ஜி) மத்திய அரசு கொண்டுவந்தது.
இதில், திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநில அரசுகளுடன் 60-40 என்ற சதவீதத்தில் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 100 நாள்களாக இருந்த வேலை நாள்கள், இனி 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது.
இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் மசோதாவின் அம்சங்களைக் கண்டித்து, அறிமுக நிலையிலேயே எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
இந்த மசோதா, திட்டப் பணிகளின் நிா்ணயம் தொடா்பான கிராம சபைகளின் உரிமையைப் பறிப்பதுடன், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை உருவாக்குகிறது. பணக்காரா்களுக்கு ஆதரவான அரசின் ஏழைகள் விரோத, தலித் விரோத நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், புதிய ஊரக வேலைவாய்ப்புச் சட்ட மசோதா மீது எதிா்க்கட்சிகள் எழுப்பிய ஆட்சேபங்கள் மற்றும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பதிலளித்தாா்.
அப்போது, மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். மேலும், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். மேலும், மசோதா நகலைக் கிழித்து எறிந்தனா்.
பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் அமளி தொடா்ந்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா்.
மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கும் அறிமுக நிலையிலேயே மசோதாவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். நீண்ட விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பலா் வெளிநடப்பு செய்து, நாடாளுமன்ற வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.