அமைச்சர் பதவிக்காகத்தானே தி.மு.க. கூட்டணியிலிருந்து வி.சி.க. பிரிந்தது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கேட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கேட்டார்.
முன்னதாக, கடந்த வாரம் பொது நிகழ்ச்சியில் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், தி.மு.க. அணியிலிருந்து இடதுசாரிகளும் வி.சி.க.வும் பிரிந்ததற்கு தி.மு.க.வே காரணம் என்றும் இடையில் வந்த தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதும் முக்கிய பிரச்னை என்றும் குறிப்பிட்டார்.
அதற்கு இன்று பதில்கூறுவதாக பிரேமலதா சொல்லியிருந்தார். தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அமைச்சர் பதவிக்காகத்தானே வி.சி.க. கூட்டணி மாறியது; அதை விட்டுவிட்டு தே.மு.தி.க.வை ஏன் இழுக்கவேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட தி.மு.க. அணியிலிருந்துவிட்டு வெளியிலிருந்துதானே அரசுக்கு ஆதரவு தருகின்றன. நீங்களும் அப்படிச் செய்யமுடியுமே? ஏன் போனீர்கள்... அமைச்சர் பதவிக்காகத்தானே?” என்று பிரேமலதா கேள்விகளை அடுக்கினார்.