அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு 
தமிழ் நாடு

அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு...தீர்வு என்ன?

Staff Writer

"அரிசி, பருப்பு, சர்க்கரை உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, த.வெ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது" என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு :

"தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரிசி, சர்க்கரை, பருப்பு உட்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே செல்வது ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது த.வெ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50% வரையிலும், அரிசியின் விலை 40% வரையிலும், எண்ணெயின் விலை 60% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று தினகரன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram