மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்தில் 3 முறை தமிழகம் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், வருகிற மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி, மதுரை திருப்பரங்குன்றம் வரவுள்ளதாகவும் அங்கு நடைபெறும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி ஓரளவு இறுதியாகியுள்ள நிலையில் மேலும் சில கட்சிகளைச் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கூட்டணியில் தேமுதிகவை மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் வரும்போது எதிர்பார்க்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
எனவே பிரதமரின் வருகைக்கு முன்னதாகவே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.