கனமழை எச்சரிக்கை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – இந்திய வானிலை ஆய்வு மையம்

Staff Writer

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் (ராமநாதபுரம்) 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பாம்பன் பகுதியில் 5 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைகான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீ. வரை மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.