தமிழ் நாடு

இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலில் நுழைய கட்டுப்பாடு!

Staff Writer

இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு உள்ள சூழலில், பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை, தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, நீக்கப்பட்ட பதாகையை மீண்டும் வைக்கவும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி ஸ்ரீமதி இன்று வழங்கினார். அதில், இந்து அல்லாதவர்கள் கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், கடவுள் நம்பிக்கை அல்லாதவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.