ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி 
தமிழ் நாடு

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Staff Writer

ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற நூலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை, ஆய்வு நூல்களைb பெருமைப்படுத்தும்விதமாக 1954-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான விருது ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவரான வேங்கடாசலபதி, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.

சென்னை, வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியரான இவர், வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன், உ.வே.சா., எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார் என கடந்த நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

அந்தக் காலத்தில் காப்பி இல்லை, ஆஷ் அடிச்சுவட்டில், வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா, Who Owns That Song?: the Battle for Subramania Bharati's Copyright, Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 எதைப் பற்றியது?

1908ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் விரிவாக ஆராயும்வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது.