நாதக சீமான் 
தமிழ் நாடு

‘நடிகையிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில்...’ - நீதிமன்றம் எச்சரிக்கை!

Staff Writer

நாதக தலைவர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஆரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பும் பேசி முடிவுக்கு வர நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீமானை கைது செய்தவற்கான தடையை நீட்டித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், இந்த வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.