தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த கடைசி தேதி ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அப்போது பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் SIR பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கி உள்ளது. அந்த அடிப்படையில் கடந்த 27 மற்றும் 28ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மீண்டும் விண்ணப்பித்தனர்.
மேலும் வரும் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தம் செய்ய வரும் ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் SIR குறித்த விழிப்புணர்வு வாசகம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது அதில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை மீண்டும் இணைப்பதற்கான கடைசி தேதி 18.1.2026 என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மட்டும்தான் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது