தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சிறப்பு டெட் தேர்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் -1 தேர்வு தமிழகம் முழுவதும் 222 மையங்களில் இன்று நடைபெற்றது. இதில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க மாநில அளவில் மத்திய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டதுடன், 966 அதிகாரிகள், பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று நடைபெற்ற தேர்வு, எளிமையாகவும் கடினமாகவும் கலவையாக இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. அதில், மாநிலம் முழுவதும் 613 தேர்வு மையங்களில் 1,67,743 பேர் தேர்வெழுத உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.