புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. அதி கனமழையால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்பையும், சேதாரத்தையும் எதிர்கொண்டுள்ளனர். 4 பேர் மழையால் உயிரிழந்தனர். மழை, வெள்ளம் ஏற்படுத்திய சேதம் அதிகம் என்பதால் அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மழை, வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
கனமழையால் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியையும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதவிர, கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.40,000, ஆட்டிற்கு ரூ.20,000, படகு சேதம் அடைந்திருந்தால் ரூ.10,000, வீடு முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.20,000, விளை நிலம் ஹெக்டேருக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.