தமிழ் நாடு

தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா… அதிமுகவினர் நூதன எதிர்ப்பு!

Staff Writer

தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று அதிமுக உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், சட்டப்பேரவைக்கு வருகைதந்த அதிமுக உறுப்பினர்கள் அழைப்பிதழை கொண்டுவந்தனர்.

அந்த அழைப்பிதழில், “மாபெரும் காது குத்தும் விழா, கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், சட்டப்பேரவையில் நடைபெறும் இவ்விழாவிற்கு தலைமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னின்று காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.