ஸ்மார்ட் மீட்டர் 
தமிழ் நாடு

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!

Staff Writer

ஸ்மார்ட் மீட்டர்களுக்கான டெண்டரை தமிழக மின்வாரியம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி வெவ்வேறு நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. அவற்றில் அதானி நிறுவனமே குறைந்தபட்ச விலை உடன் டெண்டர் கோரி இருந்தது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அதானி தமிழகம் வந்ததாகவும், முக்கிய புள்ளிகளை சந்தித்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. தமிழக அரசு அதானிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு சில கட்சியினரும், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினரும் குற்றம் சாட்டினர். இத்தகைய பின்னணியில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை தமிழக மின்வாரியம் ரத்து செய்துள்ளது.

அதானி நிறுவனம் கோரிய டெண்டர் தொகை மின்வாரிய பட்ஜெட்டிற்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மின் மீட்டர் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.