சபாநாயகர் அப்பாவு 
தமிழ் நாடு

டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - சபாநாயகர் அறிவிப்பு

Staff Writer

வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் குறித்து தலைவர் அப்பாவு செய்தியாளர்களை இன்று சந்தித்து அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, சட்டப்பேரவை விதி 26.1ன் கீழ், சட்டப்பேரவைக் கூட்டமானது வருகிற டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடவிருக்கிறது என்று அறிவித்தார்.

எத்தனை நாள்கள் நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அலுவல் ஆய்வுக் குழு கூடித்தான், பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என முடிவெடுக்கும் என்றும். இனி காலை 9.30 மணிக்கு அவை கூடும் என்று கடந்த தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.

பொதுவாக, அலுவல் ஆய்வுக் குழு கூடித்தான், கூட்டத் தொடர் குறித்து முடிவெடுக்குமே தவிர, கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்று நான் தன்னிச்சையாக அறிவித்துவிட முடியாது, அலுவல் ஆய்வுக்குழுவில் அனைத்துக் கட்சியினரும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அப்பாவு கூறினார்.

பேரவைக் கூட்டத் தொடர் நேரலை குறித்து கேட்டதற்கு, சட்டப்பேரவை நடவடிக்கைகள் படிப்படியாக நேரலை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த கேள்விக்கு, செயற்கை நுண்ணறிவு துறையில், இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சட்டப்பேரவையும் காகிதமில்லாத சட்டப்பேரவையாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்த்து மாணவர்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.