அமைச்சர் அன்பில் மகேஸ் 
தமிழ் நாடு

“பெண்களின் உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்” – அன்பில் மகேஸ் பெருமிதம்

Staff Writer

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு தான் பெண்களின் உயர் கல்வி சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,” எல்லோருக்கும் மகிழ்ச்சியான, பெருமிதமான செய்தி வந்துள்ளது. இந்தியாவிலேயே பெண்களின் உயர்கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என ஒன்றிய அரசே சொல்லியுள்ளது. இந்தச் சாதனைக்கான secret success என்றால் புதுமைப் பெண் திட்டம்தான். பெண் கல்விக்கென்று புதுமைப் பெண் திட்டத்தை நாட்டுக்கே முன்னோடியாகக் கொண்டு வந்தார் நம் முதல்வர். இப்போது அந்தப் புதுமைப் பெண் திட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது என நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நம் தமிழ்நாட்டில் பள்ளி கல்வி முடிந்த பிறகு கல்லூரியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என இந்திய ஒன்றியத்தின் பள்ளிக் கல்விக்கான தகவல் அமைப்பு (the unified district information system for education plus ) தெரிவித்துள்ளது.

UDISE+ அறிக்கை அடிப்படையில் கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகளின் சதவீதம் 2020 – 2021 கல்வியாண்டில் 49.8 சதவீதமாக இருந்தது. அதுவே புதுமைப் பெண் போன்ற பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்தியதற்குப் பிறகு 2024-2025 கல்வியாண்டில் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு தான் இதில் முதலிடத்தில் உள்ளது.

மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது தான் திராவிட மாடல். இது தான் திராவிட மாடலின் உண்மையாக வெற்றி (real success stories) திராவிட மாடல் 2.0 ஆட்சி விரைவில் தொடங்க உள்ளது. அப்போது நூறு சதவீதம் பெண் பிள்ளைகள் கல்லூரிக்குப் போவதை முதலமைச்சர் உறுதி செய்வார். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பத்தின் ஐந்து தலைமுறை உயரும் என்பார் நமது முதல்வர். அவ்வகையில் தமிழ்நாட்டு பெண்கள் தரணியை ஆளப் போகிறார்கள் என்பது உண்மை. அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.