தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள கருத்து:
"சென்னை நகரின் சில பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்க வேண்டும். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைந்து தமிழ்நாட்டைக் காப்போம்." என்று அண்ணாமலை கூறியுள்ளார்.