தமிழ் நாடு

முருகனின் அறுபடை வீடுகளில் களைகட்டிய தைப்பூசம்!

Staff Writer

தைப்பூச திருநாளை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தைப்பூச திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இன்று உலக முழுவதும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழனியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் குத்தியும் ஆடிப்பாடி வந்தனர். அதேபோல், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உட்பட முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபட்டனர்.

அதேபோல், வடலூர் வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் 153ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூசம் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.