முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

“திராவிட மாடல் அரசு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு...”

Staff Writer

திராவிட மாடல் அரசு- ஒரு கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசு என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “இப்போது நான் மகிழ்ச்சியில் மட்டுமல்ல, பெருமையாகவும் நிற்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், நேற்று, பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பெருமிதத்தில் கம்பீரமாக உங்கள் முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன்! “பொருநை – தமிழரின் பெருமை!” “இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனிமேல், தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும்! என்ற நம்முடைய வாதத்திற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக நாம் நிறுவி இருக்கிறோம்!

நாம் ஏன் கீழடி – பொருநை என்று நம்முடைய வரலாற்று தரவுகளை, தொடர்ந்து உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம்? தமிழர்களான நம்முடைய பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது!

இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது, நம்முடைய தமிழ்நிலம்தான்! அதற்கு பல இலக்கியச் சான்றுகள் இருக்கிறது! ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது! எனவே, அதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும், தொல்லியல் சான்றுகளை சேகரிக்கவும் நாம் மேற்கொள்ளும் காலப் பயணம்தான் அகழாய்வுகள்!

இந்த நிலையில்தான், கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்களுடைய எண்ணம் என்ன? தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் நடைபெறக் கூடாது; மீறி நடந்தாலும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்துவிடக் கூடாது!

இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட, தமிழ் மீதும் – தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை எதிர்த்துதான் நாம் இன்றைக்கு உறுதியுடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்துவிட முடியுமா? நம்முடைய கடமையில் இருந்து நாம் பின்வாங்கிவிட முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது!

ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்! நாமும் தொடர்ந்து அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்! சான்றுகளை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுவிட்டால் மட்டும் போதுமா? அறிவுத்தளத்தில் மட்டும் போராடிக் கொண்டிருந்தால் போதுமா? அதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டு வைத்து இன்றைக்கு அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம்!

13 ஏக்கர் நிலப்பரப்பில், 54 ஆயிரத்து 296 சதுர அடி பரப்பளவில், பொருநை அருங்காட்சி அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்! தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழினத்தின் தலைமை இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல, ஒரு தமிழனாகவும் நான் இன்றைக்கு பெருமைப்படுகிறேன். நான் இங்கே கேட்க விரும்புவது, உறுதியோடு உங்களை எல்லாம் நான் கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று, இந்த அருங்காட்சியகங்களை பார்க்க வேண்டும்! பார்ப்பீர்களா? பார்த்தே தீரவேண்டும்.

இந்த நேரத்தில், மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அறிவிப்பு வந்தது. அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்குப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளை மேற்கொண்டு இப்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அதனால், இந்த நேரத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழ்நாட்டில் கட்டியிருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பார்க்கவேண்டும். இந்த கூட்டத்தின் மூலமாக, இந்த விழாவின் மூலமாக நான் அன்போடு அவர்களை அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால்தான் தமிழினுடைய நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மை கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

நம்முடைய திராவிட மாடல் அரசு என்பது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். அதற்கான பெருமைமிகு சாட்சிதான், கீழடியும், இங்கு அமைந்திருக்கும் பொருநை அருங்காட்சியகமும்! வெளியில் நம்மை எதிர்க்கக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக் கூடியவர்கள், “தமிழ் என்றாலே தி.மு.க-தான்; வேறு யாராலும் இதையெல்லாம் யோசிக்கக் கூட முடியாது” என்று மனதிற்குள் நிச்சயம் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்!

அதுமட்டுமா! இன்றைய தினம் 235 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 33 முடிவுற்ற பணிகளை நெல்லை மாவட்ட மக்களுக்காக நான் திறந்து வைத்திருக்கிறேன்! அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நெல்லை பன்னோக்கு மருத்துவமனையில், இதயம், நரம்பு, சீறுநீரகம், கல்லீரல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான அனைத்து நவீன கட்டமைப்புகளையும் கொண்ட மருத்துவமனை கட்டடம் முக்கியமாக இருக்கிறது!

தமிழ்ப் பெருமைக்கு பொருநை மியூசியம்! மக்கள் உயிர்காக்க மருத்துவமனை! “அப்போது நெல்லை மக்களுக்கு அறிவுப் பசிக்கு என்ன?” என்று கேட்கிறீர்களா!

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்

திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம் எனும் வரிசையில்,

நம்முடைய நெல்லையில கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் பெயரில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருக்கிறேன்.

நெல்லையின் அடையாளமாக நெல்லையப்பர் கோயில், திருவள்ளுவர் இரட்டைப் பாலம், தாமிரபரணி – இந்த வரிசையில் இனி, பொருநை அருங்காட்சியகமும், மாபெரும் அறிவுத் திருக்கோயிலாக அமையப் போகின்ற காயேதே மில்லத் நூலகமும் இருக்கும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.