சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதுவும் சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன வீதி உலா நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு மேல் போர் தொடங்கியது. முருகப்பெருமானை எதிர்கொள்வதற்காக அசுர படையும் தயாரானது. முதலிலில் தாரகாசுரனையும் இரண்டாவதாக சிங்கமுகாசுரனையும் வேல் கொண்டு வீழ்த்தினார் முருகன். அதன்பின்னர் சூரனை வதம் செய்து ஆட்கொண்டார். அவனை தனது வாகனமான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். இத்துடன் சூரசம்ஹார நிகழ்வு நிறைவு பெற்றது.
சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.
ஏரளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதால் பாதுகாப்புப்பணியில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.