தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன் 
தமிழ் நாடு

சிதம்பரத்தில் மீண்டும் போட்டி - திருமாவளவன் திட்டவட்டம்!

Staff Writer

வரும் மக்களவைத் தொகுதியில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தானே மீண்டும் போட்டியிடப் போவதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இதைக் கூறினார். 

தி.மு.க. அணியில் வி.சி.க. உட்பட்ட பல கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதியாகாத நிலையில், இந்தத் தேர்தலில் அவர் தொகுதி மாறுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிதம்பரம் தொகுதி பற்றிய திருமாவின் அறிவிப்பு அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  

பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கும் கட்சி மாறிக்கொண்டு இருக்கிறார்கள்; வயது மூப்படைந்தவர்கள், 70 வயது கடந்தவர்கள் மாஜிகள் பா.ஜ.க.வில் சேர்கின்றனர் என  கிண்டலாகவும் கூறினார், திருமாவளவன். அ.தி.மு.க.வை பலவீனமாக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

சிதம்பரம் தொகுதியில்தான் நிற்பீர்களா எனக் கேட்டதற்கு, “ இது என்னுடைய சொந்தத் தொகுதி.” என அழுத்தமாக இரண்டு முறை சொன்னதுடன், இங்குதான் நான் போட்டியிடமுடியும், உங்கள் ஆதரவுடன் எனப் புன்னகையுடன் குறிப்பிட்டார்.