தமிழ் நாடு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

Staff Writer

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (பிப்.10) நிறைவடைகிறது.

தமிழகத்தில் அடுத்த ஓரிரு வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்கவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் பெயர்களைச் சேர்க்கவும் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி 12,43,363 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிமொழிச் சான்றுடன் சமர்ப்பிக்க ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

புதிதாக பெயர்களைச் சேர்க்கவும், இடமாற்றம் செய்ய விரும்புவோர் படிவம் 6மற்றம் இடம்ற்ற செய்ய விரும்புபவர்கள் படிவம் 8ஐ பூர்த்தி செய்து அளித்தனர். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக பெயர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, ஜனவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மீண்டும் 10 நாட்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இன்றுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.