மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், இந்தத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"மதுரை ,கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி தர மறுத்துள்ளது .
2017 மெட்ரோ ரயில் கொள்கையின் குறைந்தபட்ச விதிமுறையான 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை காரணமாக சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர், சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை ஆகியவற்றுக்கான மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
ஆனால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏறக்குறைய கோவை, மதுரைக்குச் சமமான மக்கள் தொகையைக் கொண்ட ஆக்ரா, போபால், பாட்னா போன்ற வட இந்திய நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்சப் போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒன்றிய பா.ஜ.க. அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது." என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.