தமிழ் நாடு

கரும்புலி அங்கயற்கண்ணி... நினைவுகூர்ந்து உரையாற்றிய வைகோ!

அபூர்வன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பூண்டி புஷ்பம் கலைக் கல்லூரியின் தாளாளருமான பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் ஒரு விழாவாக அனுசரிக்கப்பட்டது. தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தி விட்டுச் சிறப்புரையாற்றினார். அவர்  உரை வருமாறு:

 "வாழ்க்கையில் சில சம்பவங்கள் மனதிலே நீங்காத இடத்தைப் பெற்றுவிடுகின்றன.  பூண்டி பெரிய வாண்டையார்  காங்கிரஸ் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தொண்டாற்றி, பிறகு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராகி தியாகச்சுடர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின்  அன்பையும் நம்பிக்கையும் பெற்றவர். அந்தக் குடும்பத்தில் பூண்டி வீரையா வாண்டையார் பூண்டியிலே அமைத்த கல்லூரி, 1970 ஆம் ஆண்டு வீரையா வாண்டையார் மறைந்ததற்கு பின்னர் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த  நெஞ்சில் வாழும் துளசி ஐயா வாண்டையார் அவர்கள் வீரையா வாண்டையார் நினைவு புட்பம் கல்லூரி என்று அதற்குப் பெயர் சூட்டி  1970 லிருந்து அவர் மறைகிற காலம் வரை சிறப்பாக நடத்தி வந்தார்.

 1929 ஆண்டு மே 11 ஆம் நாள் பிறந்த பெருமைக்குரியவர்   2021 இதே மே 17 ஆம் நாள் நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்தார் ; உயிர் நீத்தார் என்ற வகையில்  50 ஆண்டு காலம் வந்த கல்லூரியின் தாளாளராக செயலாளராக அவர் பொறுப்பேற்ற காலங்களில் இந்தச் சோழ மண்டலத்தில் மட்டுமன்று பல்வேறு பகுதிகளில் இருக்கக் கூடிய ஏழைக் குடும்பத்து பிள்ளைகள்  வறுமையின் பிடியிலே அகப்பட்டு இல்லாமையால் போதாமையால் பாதிக்கப்பட்ட

குடும்பங்களிலே பிறந்த பிள்ளைகள் மாணவிகள் மாணவர்களுக்குத்  தனிக் கட்டணம் எதுவும் வாங்காமல் கல்லூரியில் கல்வியைக் கொடுத்தார்.

மிகுந்த ஏழ்மையிலே இருக்கக்கூடிய மாணவர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் உதவிகள் செய்தவர். அதற்காக விளம்பரம் செய்துகொள்ளாதவர். கடையெழு வள்ளல்கள் தமிழகத்தில் எப்படி வள்ளன்மையைப் போற்றினரோ அதைப்போல் வாரி வழங்கி  லட்சக்கணக்கான மாணவ மாணவிகளைப்  பட்டதாரிகளாக்கி அந்தப் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களிலே ஒளிவிளக்கு ஏற்றி வைத்தவர் , இங்கே திருவுருவப் படமாக அமைந்திருக்கின்ற பூண்டி துளசி ஐயா வாண்டையார்  அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில்  புகழேந்தல் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் வழங்கியமைக்காக என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வது என் தலையாய கடமை ஆகும்.

நான் மாணவிகளுக்குச் சொல்லிக்கொள்வேன்,  நீங்கள் பயிலுகிற கல்லூரியிலே  பட்டங்கள் படிக்கும்போது உயர்ந்த மதிப்பெண்களையும் பெற்று உங்கள் எதிர்காலத்தில் மேற்படிப்புக்கும் சென்று முனைவர் பட்டங்களையும் பெற்று  நீங்கள் விரும்புகிற பணியில் இடம் கிடைத்து பணியாற்றி உங்கள் தாயும் தந்தையும் மனம் மகிழத்தக்க வகையிலும் உயர்வு பெற்று உங்களுடைய வாழ்வு ஒளிமயமானதாக உ ற்றார் உறவினர் எல்லோரும்  போற்றத்தக்க வகையில் அமைந்திட வேண்டுமென்று இந்த அரங்கத்திற்கு வந்திருக்கக் கூடிய மாணவச் செல்வங்களுக்கு  குறிப்பாக மாணவிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதிலேயே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் பயிலுகிற பாடப் புத்தகங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் .நான் பள்ளியில் பயிலுகிற போதே  பெரிய எழுத்து மகாபாரதத்தை ஐந்தாது வகுப்பிலேயே மூன்று முறை படித்துவிட்டேன் .

ஏழாவது வகுப்பு படிக்கும்போது  மராத்தியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் வி. ஸ. காண்டேகர் அவர்கள் எழுதிய நூல்களை  கா. ஸ்ரீ .ஸ்ரீ அவர்கள் மொழிபெயர்ப்பில் படித்து அதில் வருகின்ற கதாபாத்திரங்களின் பால் பற்றுக்கொண்டவனாக இருந்தேன்.

 கிரௌஞ்சவதம் என்ற அற்புதமான புதினத்தை காண்டேகர் எழுதியிருப்பார். அதில் தலைமைப் பாத்திரமாக வருகின்றவர் பெயர் திலீபன்.அந்த கிரௌஞ்சவதத்தைப் போல அவர் எழுதிய கருகியமொட்டு, இருதுருவங்கள்  படித்திருக்கிறேன்.டாக்டர் மு.வ அவர்கள் எண்ணற்ற நூல்களை எழுதினார் .

கள்ளோ காவியமோ, கரித்துண்டு ,அகல்விளக்கு இந்த நூல்களை எல்லாம் நான் படித்தேன்.

அந்தக் காலகட்டத்தில் தான் வீட்டுக்கு வாரா வாரம் வந்து கொண்டிருக்கக்கூடிய கல்கிப் பத்திரிகையில் வருகின்ற கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய பார்த்திபன் கனவும் சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் என் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொண்டன.

அந்த நூல்களைப் படித்ததால்தான் இந்தத் தமிழ் மண்ணின் மீதும் பழந்தமிழர் நாகரிகத்தின் மீதும் அந்தப் பேரரசுகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் சாதித்த சாதனைகள் பற்றியும்  என் இதயத்தில் தாக்கம் ஏற்பட்டது. தன்னிழல் தன் தரையிலேயே விழாத பெருவுடையார் கோவிலைக் கட்டி எழுப்பினானே ராஜராஜ சோழன்  அவனும் அவனது புதல்வன் வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழனும்  கடல்கடந்து நாடுகளுக்குப் படை எடுத்துச் சென்று கீழ்த்திசை நாடுகளை எல்லாம் வென்று  தென்கிழக்கு ஆசியாவில் பல் வேறு நாடுகளில் சோழ மன்னர்களின் புலிக்கொடி தான் பறந்தது. ஆனால் எந்த நாட்டினரையும் அவர்கள் அடிமைப்படுத்தவில்லை. அவர்கள் மீது தங்கள் படையினரைக்கொண்டு அடக்குமுறை செய்ததில்லை. சிற்பக்கலைகளை வளர்த்தார்கள்; ஆலயங்கள் கட்டினார்கள்; வணிகத்தைப் பெருக்கினார்கள் .

'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூடையும்,

வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்                                                                                 

அரியவும், பெரியவுமாக ' எங்கள் காவிரி பூம்பட்டினத்துக் கடற்கரையில் அம்பாரம் அம்பாரமாக குவிந்து கிடந்தன.

 யவன நாட்டிலேயிருந்தும் ரோமாபுரியிலேயிருந்தும் எகிப்திலேயிருந்தும் டைகிரீஸ் யூபரடீஸ் நதிகளுக்கடையிலேயிருந்து பாபிலோனைத் தலைநகராகக் கொண்ட சுமேரியாவிலேயிருந்தும் வணிகர்கள் காவிரிபூம்பட்டினத்துக்கு வந்தார்கள் . அவர்களோடு புரவிகளும் குதிரைகளும் கொண்டு வந்தார்கள் . இந்தப் பொருட்களை இங்கு விலைக்கு வாங்கி அங்கே கொண்டு போய் விற்றார்கள்.

இது வரலாறு கற்பனை அல்ல.இதை எழுதியவர் பண்டித ஜவகர்லால் நேரு.  தன் பிரியமகள் பிரியதர்சினி இந்திரா அவர்களுக்கு  அவர் பிரிட்டிஷ் ஆட்சியிலே சிறைப்பட்ட போதும்  அகமது நகர் கோட்டை சிறையிலே இருந்தும் நைனிடால் சிறையிலே இருந்தும்  மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்த வரலாற்றைக் குறித்து ஒவ்வொரு நாட்டின் வரலாற்றையும்  ஒன்றுடன் ஒன்றையும் இணைத்து இணைத்து  ஒப்புமை காட்டி எழுதிஇருக்கிறார்.அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப் புத்தகம் உலகில் வேறு எவரும் எழுதியதில்லை என்று சொல்வேன்.

ஹெச் ஜி வெல்ஸ் எழுதி இருந்தாலும் நேருவின் புத்தகம்தான் உலக சரித்திரக் கடிதங்கள் என்று சொல்லப்படுகிறது. வலிமை வாய்ந்த சோழப் பேரரசு  என்று குறிப்பிட்டுவிட்டு அந்த சோழப் பேரரசு எவ்வளவு வலிமை வைத்திருந்தது தெரியுமா ?பெரும் கப்பல் படை வைத்திருந்தார்கள். அந்த கப்பல்களில் போர் யானைகளை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் வாய்ந்த கப்பல்களை நிர்மாணிக்கக் கூடிய  தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல நாடுகளை வென்றார்கள்.

 இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கக் கூடிய இந்த இந்திய உபகண்டத்தில்  பல மாநிலங்கள் இருக்கின்றன  பல தேசிய இனங்கள் இருக்கின்றன .ஆனால் எவருக்கும் தமிழனுக்குரிய தமிழ்நாட்டுக்குரிய பெருமை எந்த மாநிலத்துக்கும் கிடையாது . மராட்டியத்துக்கும் கிடையாது; வங்காளத்துக்கும் கிடையாது;  பஞ்சாப்புக்கும் கிடையாது.  தமிழ் நாட்டுக்குத்தான் உண்டு.அப்படிப்பட்ட படை வலிமையைப் பெருக்கியவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு ஜனநாயகம் பேசப்படுகிறது  ஜனநாயகத்தின் தாக்கம் தேர்தல் காலங்களிலேயே வெளிப்படுகிறது . ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு பட்டினம் அல்லது ஊர் அதற்கு தலைவராகத் தேர்ந்து எடுக்க வேண்டுமென்றால்  குடவோலை முறையைக் கொண்டு வந்தது மட்டுமல்ல இதற்குத் தலைவராகப் போட்டியிடுபவர்கள் விருப்பச் சீட்டைத் தருகிறவர்களுக்கு இன்னன்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தார்கள்.

அந்தத் தகுதிகளைப் படித்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள் .இந்த தகுதிகளைக் கொண்டவர்தான் இந்த தலைவர் பதவிக்குப் போட்டியிடமுடியும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தீர்மானித்தார்கள்.  அப்படிப்பட்ட சோழர்களின் வரலாற்றைப்  பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட பொன்னியின் செல்வனை என் அன்புப்  பேத்திகள் வயதிலேயே இருக்கக் கூடிய மாணவிகளே , உங்களுடைய பாடப் புத்தகங்களுக்கு மத்தியில் நீங்கள் ஷேக்ஸ்பியர் படிக்கலாம் , வேர்ட்ஸ்வொர்த் படிக்கலாம், மீண்ட சொர்க்கமென்ற பேரடைஸ் லாஸ்ட் என்று மில்டனை படிக்கலாம்,

ஷெல்லியின் கவிதைகளைப் படிக்கலாம், ஆனால் நீங்கள் இந்தத் தமிழ்நாட்டின் சரித்திரத்தைச் சொல்கிற இந்த நூல்களைப் படியுங்கள் .படிக்க ஆரம்பித்தால் 50 பக்கத்துக்குப் பிறகு நீங்கள் இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டீர்கள் .

நான் படித்த காலத்தில் எங்கள் வீட்டிலேயே மின்சாரம் எல்லாம் கிடையாது.அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் விடியற்காலை மூன்று மணிவரை படித்திருப்பேன் பொன்னியின் செல்வனை.

 மே 17 இந்த நாள் தியாகத் திருநாள்,நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக் கூடிய துளசி ஐயா வாண்டையார் அவர்களின் ஐந்தாவது நினைவு நாள்.

 இந்த நாள் மனித குல வரலாற்றில் துயரம் தோய்ந்த நாள், தமிழ் இனம் காயப்படுத்தப்பட்ட நாள். இந்த நாளில் வரலாற்றில்  ஆயிரம் ஆயிரம் ஈழத்தமிழ் நங்கையரும்  ஈழத்தமிழ் சகோதரிகளும்  படுகொலை செய்யப்பட்ட நாள்.

 சுதந்திர தமிழ்த் தேசம் தங்களுக்கென்ற ஒரு நாடு வேண்டுமென்று  போராடிய எண்ணற்ற வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் .

1986 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் நியூயார்க் அருகில் ஈழத்தமிழர்  மாநாடு நடைபெற்றபோது அழைக்கப்பட்டிருந்தேன். அந்த மாநாட்டில் போய் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது சொன்னேன் உலகத்தில் தமிழருக்கென்றொரு நாடில்லை . ஐநா மன்றம் நியூ யார்க் நகரில்  உயர்ந்த கட்டிடம் அந்த கட்டிடத்துக்கு முன்னாலே ஒவ்வொரு  நாட்டினுடைய சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

நான் முன்னும் பின்னுமாக நடந்தேன். அப்பொழுது 158 நாடுகள் சுதந்திர நாடுகளாக அந்தக் கொடிகள் பறை சாற்றிக்கொண்டு இருந்தன. நான் மனம் உடைந்தவனாக இருந்தேன்.

நியூயார்க் நகரிலே இருந்து  என்னுடைய உயிர் நண்பர் சுருளி நாராயணசாமி அவர்கள் இல்லத்திலிருந்து தமிழ்நாட்டிலே 678 பேருக்கு கடிதம் எழுதினேன் . அந்தக் கடிதத்தில் என் மனக்குமுறலைப் பதிவு செய்தேன்.

 நேற்றுவரை காட்டுமிராண்டிகளாகத் திரிந்தவர்கள் ,ஆடை அணிகின்ற அந்தக் கலை அறியாமல் நிர்வாணிகளாகத் திரிந்தவர்கள்  அவர்களுடைய நாடுகளுக்கெல்லாம் தனித்தனி நாடுகள் தனித்தனி கொடிகள்  வந்துவிட்டதே .ஆனால் உலகில் முதலில் தோன்றிய இனம் கலைகளைக் கண்ட இனம் உடையணியும் கலையை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பெற்றிருந்த இனம் நம் இனம். காட்டுமிராண்டிகளாக மரக்கிளைகளிலே  குகைகளிலே அவர்கள் வாழ்ந்தபோது  இல்லங்களைக் கட்டி எழுப்பி புகழோடு வாழ்ந்த இனம் உலகில் முதல் நாகரிகம் எங்கே தோன்றியது என்ற கேள்வி கற்பனையானது அல்ல.உலகத்தின் புராதனமான நகரம் எது ? பாபிலோன்  என்று சொன்னார்கள். ஆனால் சேனல் 4 தொலைக்காட்சி ஒரு ஒளிப்பேழையை வெளியிட்டது .அந்த விவரத்தை நான் வேலூர் மத்தியச் சிறையில இருந்தபோது தினமலர் பத்திரிகை ஆசிரியர்  கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு பக்கம் எழுதியிருந்தார். சேனல்4 சொல்கிறது, அந்தக் காட்சியில் உலகின் பழமையான நகரம் பாபிலோன் இல்லை. இந்தியாவின் தென்கோடியில் இருக்கிறதே தமிழ்நாடு அந்த தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து  சிலகல் தொலைவிலே கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கிறதே  காவிரிபூம்பட்டினம்  பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றிய நகரம். இதை நான் சொல்லவில்லை . லண்டனில் இருக்கக்கூடிய 'சேனல் 4' தொலைக்காட்சி இதை ஒளிப்பேழையாக வெளியிட்டது.

 அத்தகைய பழமையான நாகரிகத்தை , பழமையான மொழியை , கலாசாரத்தை, பண்பாட்டை ,வீரத்தை , மானத்தை போற்றிய  இந்த இனத்துக்கென்று ஒரு நாடு உலகிலே இல்லை. தங்களுக்கு அப்படி ஒரு நாடு இருந்தது, இங்கே எப்படி சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆட்சி நடத்தினார்களோ அதைப்போலவே இலங்கைத் தீவில் பெரும் பகுதியைத் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆட்சி நடத்தினார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி தேசம் இருந்தது

ஆனால் போர்ச்சுகீசியர்கள் வந்தார்கள்  அவர்களுடைய நவீன ஆயுதங்களால்  தமிழர்களைத் தோற்கடித்தார்கள்.டச்சுக்காரர்கள் டேனிஷ்காரர்கள் பிரிட்டிஷ்காரர்கள் என்று வரிசையாக வந்தார்கள்.பிரிட்டிஷ்காரர்கள்

தமிழர் தேசத்தையும்  மீதமிருந்த பகுதியில் இருக்கக்கூடிய சிங்கள தேசத்தையும் இணைத்து நிருவாக வசதிக்காக ஒரு நாடு என்று சொன்னார்கள்.தமிழர்கள் சுதந்திரத்துக்காக அங்கே போராடினார்கள்!

 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரன் வெளியே சென்ற போது சிங்களவர்கள் கைகளிலே அந்த இலங்கைத் தீவின் மொத்த அதிகாரத்தையும் அவர்கள் கையில் கொடுத்து விட்டுச் சென்றான்.அப்படிக் கொடுத்ததன் விளைவாக

அந்த தமிழர்கள்  தங்களுக்கு உரிமை கேட்டார்கள்; வஞ்சிக்கப்பட்டார்கள் . கல்விக் கூடங்களிலேயே படிக்க இடமில்லை .எங்கும் வேலை வாய்ப்பில்லை . சிங்களம் தான் ஆட்சி மொழி என்று திணிக்கப்பட்டது .இதை எதிர்த்தவர்கள் அறவழியில் அமைதிவழியில் போராடினார்கள் . அப்படி போராடிய தமிழர்கள் மீது சிங்களக் காவல்துறையும் ராணுவமும்  பயங்கரமான அடக்கு முறையை ஏவி  கபாலங்களை உடைத்தார்கள் . தலைகளை உடைத்தார்கள் .இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே வந்து  பின்னர் தமிழர்கள் வழிபடுகிற கோவில்களின் கோபுரங்களை இடித்தார்கள். அந்தக் கோயிலுக்குத் தேர் செய்த தச்சர்களை  நடுவீதிக்கு அழைத்துச் சென்று  மணிக்கட்டுகளைத் துண்டாக வெட்டி எறிந்தார்கள்.அவர்கள் ரத்தம் கொட்டிச் செத்துப் போனார்கள்.அதை எல்லாம் விட கொதிக்கும் தார் நெருப்பில் பச்சைத் தமிழ்க் குழந்தைகளைத் தூக்கி வீசினார்கள் .அந்தக் குழந்தைகள் கருகி அதிலேயே மடிந்தன.

மாணவர் சமூதாயத்தைச் சேர்ந்த தங்கைகளே  உலக வரலாறு பழைய வரலாறு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் .உங்கள் காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்றதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக என்னை தஞ்சையிலே இருக்கக் கூடிய மகளிர் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்று பேச வைத்த போது இரண்டாயிரம் மாணவிகள் இருந்தார்கள்.

நான் ஈழத்தின் வரலாற்றைத்தான் பேசினேன் .வீரம் என்று சொன்னால் இங்கே சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியாரின் வீரத்தைச் சொல்லலாம். பிரிட்டிஷ்காரணை எதிர்த்து ஜான் சிராணி போராடினார். போர்க்களத்திலேயே மாண்டு போனார் .ஆனால் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போர்க்களத்திலேயே ஜெயித்த  இந்தியாவிலேயே ஒரே ஒரு அரசு அது சிவகங்கை அரசு , அதனுடைய ஆட்சிப் பொறுப்பிலே இருந்த வேலுநாச்சியார்தான்.அந்த வரலாற்றையும் நீங்கள் படிக்க வேண்டும் . தென்னாப்பிரிக்காவிலே கறுப்பர்களுக்கும்  இந்தியர்களுக்கும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள்  போராடிய காலத்தில்  அறப்போரிலே கலதுகொண்டவர்  உங்கள் மண்ணைச் சேர்ந்த  தில்லையாடி வள்ளியம்மை, 16 வயதிலேயே சிறை சென்றார். உயிருக்கு ஆபத்தான உடல்நிலையில் விடுவிக்கப்பட்டார் . அந்த இடத்துக்கு மகாத்மா காந்தி போனார்.

பக்கத்தில் சோகத்தோடு அமர்ந்தார் . கவலைப்படுகிறாயா அம்மா? என்றார். இல்லை நான் சாகப்போகிறேன் . மீண்டும் எனக்கு ஒரு பிறவி உண்டாகுமானால் நான் தமிழச்சியாகப் பிறக்கவேண்டும் , உங்களுடைய போராட்டத்தில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னாள்.அந்த இடத்திற்கே வந்து காந்தியார் பெருமைப் படுத்தினார்.அந்த வள்ளியம்மை இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்.

 நான் என் அன்பு மாணவச் செல்வங்களுக்குச் சொல்வேன் . உங்களுடைய கல்வி அறிவிலே நீங்கள் உயர வேண்டும்.

ஆனால் உங்களைப் போன்ற 16, 17, 18 வயதில் இருக்கக்கூடிய பெண்பிள்ளைகள்  மண்ணின் விடுதலைக்காகப் போர்க்களத்துக்குச் சென்றவர்கள் அந்த ஒரு சம்பவத்தை மாத்திரம் சொல்லிவிட்டு துளசி அய்யா வாண்டையார் புகழ் சரித்திரத்துக்கு வருகிறேன்.

அங்கயற் கண்ணி என்பது அந்த பெண்ணின் பெயர், 18 வயது பெண்கள் பிரிவுப் படைக்குத் தலைமை தாங்கியவர்.கரும்புலி ஆகியவர். கரும்புலிஎன்றால் உயிரைத் தத்தம் செய்வது என்று முடிவெடுத்துக்கொண்டு இருப்பவர்கள் . ஒன்றரை வருடம் கழித்து தன் தாயைப் பார்க்க வருகிறாள் . அதுவரை பார்த்ததில்லை சோறு போடுகிறாள் தாயார். 'அம்மா இனி உன்னை நான் பார்க்க முடியாது '.

'ஏன் அப்படிச் சொல்கிறாய்?' 'அம்மா நான் காற்றோடு போய்விடுவேன் .நீ நல்லூர் கந்தசாமி கோயிலிலேயே திருவிழா நடக்கும் அல்லவா  அப்போது வெல்லத்தால் செய்த பண்டங்களைக் கொண்டு போய்  அங்கே விட்ற்றுப் பணம் சேர்த்துக்கொள்.

உன் வீட்டுக்கு நிறைய பேர் இனி வருவார்கள் . அவர்களுக்கு எதுவும் கொடுக்க உன்னிடம் காசு இருக்காது. இதில் விற்ற காசைக் கொண்டு அவர்களுக்கு உணவு சமைத்துப் போடு' என்று சொல்லிவிட்டு ,கப்பல் படை என்று சொன்னேனே  சிங்கள கடற் படையிலே 6000 டன் எடை உள்ள ஒரு கப்பல் ஆயுதங்களோடு  கடலில் நெடுந்தொலைவிலே அது கடலிலே அசைந்து ஆடிக்கொண்டு இருந்தது. அங்கயற்கண்ணி அந்தக் கப்பலைத் தகர்ப்பதற்காக அனுப்பப்பட்டவள் . தோழிப் பெண்கள் உடனிருந்தவர்கள் எல்லோரும் வழியனுப்பி வைக்க அவள்  நீந்திக்கொண்டே போனாள் உடல் முழுக்க வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தன்னந்தனியாக கப்பலின் மீது போய் அவள் மோதினாள் .சிங்களனுக்கு ஆறாயிரம் டன் எடை கொண்ட ஆயுதங்களை ஏற்றுக் கொண்டு வந்த அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. படார் படார் என்று வெடித்தது.

 கடற்கரையில் இருக்கக்கூடிய அங்கயற் கண்ணியின் தோழிப் பெண்கள் ஒரு பக்கத்திலே மகிழ்ச்சி கப்பல் தீப்பிடித்து தெரிகிறது என்று , இன்னொரு பக்கத்தில் அதோடு கருகிச் சாம்பலாகிப் போகிறாளே நமது அங்கயற்கண்ணி என்று அவர்கள் கண்ணீர் விட்டார்கள்.

அந்த அங்கயற்கண்ணிக்கும் சேர்த்து படுகொலை  செய்யப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்கள் தமிழ்ப் பெண்கள் அவர்களுக்கு வீர வணக்கம் செல்லுத்துகிற நாள்தான் இந்த மே 17 .

நான் வழக்கமாக சென்னை கடற்கரையில்  என் தம்பி திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்கிற  மெழுகுவர்த்திகள் ஏந்தி பொழுது சாய்ந்த பிறகு அந்த கடற்கரையிலே வீர வணக்கம் செல்லுத்தும் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் கலந்து கொள்கிறவன்.

 ஆனால் நம்முடைய ஐயா  துளசிஐயா வாண்டையார் அவர்களுடைய புகழஞ்சலிக்கு வரவேண்டும் என்று கூறியபோது அதைக் கட்டளையாக ஏற்று  இங்கே நான் வந்தேன்.

என்மீது அவர் கொண்ட பாசம் அளவிடற்கரியது .ஒரு சிறிய சம்பவத்தைச் சொல்லுகிறேன். திருக்கடையூருக்குத் திருமணமாகியும் சில ஆண்டுகளானவர்கள் செல்கிறார்கள் .கணவனும் மனவியுமாக அது மார்க்கெண்டேயன்  உடைய  தலமாக இருக்கக்கூடிய திருக்கடையூர் .

அங்கு போய்  வழிபட்டால் பூஜை புனஸ்காரம் செய்தால் தேனாபிஷேகம் பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் என்று செய்தால் பல ஆண்டுகள் கணவனும் மனைவியும் இணைபிரியாமல் உயிர் வாழலாம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கும் சென்றவண்ணம்  இருக்கிறார்கள் .அங்கே என்னைப் பெரிய வாண்டையார் அழைத்தார்.

நான் சென்றேன்  பக்கத்தில் உட்காரச் சொன்னார் . உட்கார்ந்தேன் அவரது மகனுக்கு அறுபதாவது  திருமணவிழா அவரது மகனும் மருமகளும் வந்துஅங்கே  மார்க்கெண்டேயன்  தவக்கோலத்தைத் தரிசித்து விட்டு வந்து பெரிய வாண்டையார் பாதம் பணிந்து  வணங்குகிறார்கள்;  பூக்களை அள்ளித் தூவினார்.அதோடு அவர் நிற்கவில்லை  அவர்களைப் பார்த்து பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கக்கூடிய  எந்தவகையிலும் அதற்குத் தகுதியற்றவரான  அடியேனிடமும்  தாள் பணிந்து வாழ்த்துப் பெறவேண்டும் என்று சொன்னபோது நான் திடுக்கிட்டுப் போனேன் . ஐயா வேண்டாம் ஐயா என்று சொன்னேன் .இல்லை  நீங்கள் ஒரு லட்சியத்துக்காக வாழ்கிறீர்கள்  உங்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது . அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள் என்றார். அது முடிந்தது .வெளியே வந்தார் ஆச்சரியமாக இருந்தது அவரது காரில் என்னைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார் . எல்லோரும் சொன்னார்கள் பெரிய வாண்டையார்  துளிசிஐயா வாண்டையார் காரில் எந்தத் தலைவரையும் தன் பக்கத்தில் உட்கார வைக்கமாட்டார். அவர் போற்றிய கட்சியின் பெரிய தலைவரைக்கூட அவர் வேண்டுமானால் அவர்கள் காரில் போகலாம்;  அவர் காரில் யாரையும் ஏற்றியதில்லை என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் தலைசிறந்த எழுத்தாளர் ஏற்காட்டில் மாண்ட்போர்டில் ஆங்கிலத்தில் படித்துவிட்டு லயோலா கல்லூரியில் முதுகலை வரை படித்தவர் அவருக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதமும் தெரியும்.தமிழில் பாண்டித்தியம் பெற்றதால் ஏராளமான நூல்களை எழுதி இருக்கிறார்.ஆங்கிலத்திலும் 'எ மெலோடியஸ் ஹார்மனி' என்ற இசை நுணுக்கங்களைப் பற்றிய நூல் எழுதியிருக்கிறார்

இன்ப வாழ்வு ,மனோரஞ்சிதம்,குரல் கொடுக்கும் வானம்பாடி போன்ற அவர் எழுதிய நூல்களை கல்லூரி நூலகங்களுக்கெல்லாம் இலவசமாகக் கொடுத்தார்.

  அந்த வகையில் வாழ்க்கையில் உயர்ந்த சிகரங்களுக்கு சிலர் மட்டும் செல்கிறார்களே எப்படி அவர்களால் முடிகிறது ? அந்த சூட்சுமத்தை நான் கல்லூரியில் படிக்கும்போது தெரிந்து கொண்டேன். அது எப்படி என்று வால்ட் விட்மன் வரிகளை எனது நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தேன்.

 வள்ளல்களின் சரித்திரத்தை  ஆசிரியர்கள் எழுதிக்கொடுத்தை  மனனம் செய்து  அவர்கள் முன்னால் வந்து  கூச்சமில்லாமல் பேசி விட்டேன்.அதன்பிறகு கல்லூரி நாட்களிலும்  பேச ஆரம்பித்தேன்.

அங்கு உரை ஆற்றுகிறபோது உரை பூ தொடுப்பதைப் போல் அமைய வேண்டும்.

ஒரு சம்பவத்தை ஒரு நிகழ்ச்சியை அந்த பேச்சில் குறிப்பிட்டுப் பேசினால் மீண்டும் அந்த விட்ட இடத்தில் வந்து சேர்ந்து தொடுக்க வேண்டும்.

அதுதான் சிறந்த பேச்சு.அப்படி  நீங்களும் வரவேண்டும்.

அன்று வால்ட் விட்மன் எழுதிய வரிகளை மீண்டும் சொல்கிறேன்.

 'சகாக்கள் தூங்குகிற போது சக மாணவிகள் தூங்குகிற போது  இவர்கள் அந்த இரவெல்லாம் கண் விழித்துப் படித்துக்கொண்டு இருந்தார்கள். எனவே சிகரங்களின்  உச்சங்களுக்குச் சென்றவர்கள் திடீர் என்று அந்த உச்சத்துக்குச் சென்றுவிடவில்லை . இப்படி உழைப்பவன் மற்றவர்கள் தூங்குகிற துயில்கொள்ளும் வேளையிலும்கூட  அவர்கள் கற்றுத் தேர்ந்ததால்  அந்த உயர்ந்த இடங்களுக்குச் செல்ல முடிந்தது 'என்ற கருத்துள்ள  வால்ட் விட்மன் எழுதிய  கவிதையைத்தான் என் கல்லூரியின் நோட்டுப் புத்தகத்திலே நான் பதிவு செய்திருந்தேன்.

துளசி ஐயா வண்டையார் அவர்கள்  வெள்ளிக்கிழமை உணவருந்த மாட்டார் யாரிடமும் பேச மாட்டார் .ஏன் தெரியுமா? 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் தான் காந்தி சுடப்பட்டார்.இதை கடைப்பிடிக்கக் கூடிய மனப்பக்குவம் அவருக்கு இருந்தது. பழுவேட்டரையர் மரபில் வந்தவர்கள்தான் இந்த வாண்டையார்கள் என்று ஒரு கல்வெட்டின் மூலம் அறிய முடியும்.

வாண்டையார்  தன் துணவியாரோடு  இணை பிரியாத இல்லற வாழ்க்கை நடத்தியவர்.அவரது துணைவியார் என் நாக்கில் சரஸ்வதி இருக்கிறது என்று பாராட்டியவர்.

அவர்கள் இருவருமே  என் தம்பி மகன் கல்யாணத்துக்குக் கலியப்பட்டி  கிராமத்துக்கு வந்தார்கள்.எவ்வளவு பெரிய பெருமை எங்களுக்கு.அப்படிப்பட்ட பண்பாளரை எண்ணி வியப்பாக இருக்கிறது"இவ்வாறு வைகோ உரையாற்றினர்.

 தனது சிறப்புரைக்குப் பின் இவ்விழாவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு  நிதி உதவித் தொகையையும் வைகோ தனது கரங்களால் வழங்கினார்.

 புஷ்பம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உரு. ராஜேந்திரன் முன்னெடுத்த இந்த விழாவுக்கு தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் .முனைவர் எஸ் உதயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மரு .அஞ்சுகம் பூபதி, காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளர் கோ. விஜயராகவன், கைத்தறித்துறை முன்னாள் துணை இயக்குநர்  டி .எஸ். கே. ராஜசேகர் ,மதிமுக மாவட்டச் செயலாளர் முனைவர் வி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர். வழக்கறிஞர் எஸ்.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.