த.வெ.க. வெற்றிக்காக பிரதமர் மோடி வாழ்த்தியிருந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து கூறினார்.
அவர்கள் இருவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தன் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு, “ மாண்புமிகு பிரதமர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. மக்களின் நலனே நம்முடைய ஒரே குறிக்கோள். அரசியலைக் கடந்து, மாநிலத்தின் முன்னேற்றத்திலும் தமிழக மக்களின் நலனிலும் கவனம் குவிப்போம். இந்தப் பெருமுயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராகுலுக்குத் தெரிவித்த செய்தியில், “ மக்களவையின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, உங்களின் அழைப்பிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கும், எங்கள் மாநிலத்தின் பண்பாட்டு நெறிகளைப் பாதுகாப்பதற்கும் நாம் உறுதியுடன் இருப்போம். இதில் கூட்டு ஒத்துழைப்பு வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கு நாம் முன்னுரிமை அளிப்போம்.” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார், விஜய்.