பாஜக அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மத்திய அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே தொகுப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்படலாம். திமுக கூட்டணியாவது பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.
ஆனால், அதிமுக, பாஜக இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. அவர்கள் கூட்டணி அமைப்பதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் விஜய்யை கூட்டணியில் இணைக்கிற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழுத்தம் கொடுத்து அவரை அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் ஊடகங்களில் பெரிய அளவிலே விவாதிக்கின்றன.
அவர் அந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். அது விஜய்கும் தெரியும். பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வளைக்க பயன்படுத்தும் யுக்திகளை தமிழத்திலும் பாஜக பயன்படுத்துகிறது. அழுத்தத்துக்கு விஜய் இணங்கமாட்டார். தன்னுடைய எதிர்காலத்தை அவரே சூனியமாக்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.