கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மூன்று நாள்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கர்நாடகத்தில் உள்ள கபினி அணையில் வேகமாக நீர் நிரம்பி வருவதால், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, இடையில் குறைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் விநாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர், இரு மாநிலங்களின் எல்லையான பிலிகுண்டுலுவை இன்று அதிகாலை வந்தடைந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில், அங்கிருந்து ஒகேனக்கல் பகுதிக்கு தண்ணீர் வந்தடைந்தது.
நேற்றைய நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு 300 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 8,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மதிய நிலவரப்படி, விநாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதைதொடர்ந்து, ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தற்காலிக தடை விதித்துள்ளார்.