ஓ. பன்னீர்செல்வம் 
தமிழ் நாடு

நாங்கள் அரசியல் கட்சி இல்லை… ஒபிஎஸ்!

Staff Writer

நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை; என்னை விட்டு பிரிந்து சென்றவர்களிடம் தான் அவர்களின் நிலைப்பாட்டை பற்றி கேட்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்த நிலையில், நாங்கள் அரசியல் கட்சி இல்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியலில் சரியான முடிவு எடுக்காத காரணத்தால் கட்சியை விட்டு விலகியதாக இன்று காலை திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தபடியே சென்றார். அப்போது அவரிடம் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓபிஎஸ், “என்னை விட்டு பிரிந்து சென்றவர்களிடம் தான், அவர்களின் நிலைப்பாட்டை பற்றி கேட்க வேண்டும்.” என்றார்.

”தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறியிருந்தீர்கள். இப்போது தை பிறந்துவிட்டதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் உள்ளன” என்றார்.

இதேபோல் அரசியலில் சரியான முடிவு எடுக்காததால் தான் அனைவரும் கட்சியிலிருந்து வெளியேறுவதாக கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ” எந்த கட்சி.. நாங்கள் அரசியல் கட்சி இல்லை” என தெரிவித்தார்.