நாராயணன் திருப்பதி 
தமிழ் நாடு

சிவசங்கர் பாபா இன்று வரை ஏன் தண்டிக்கப்படவில்லை? நாராயணன் திருப்பதி கேள்வி!

Staff Writer

“தமிழகத்தையே உலுக்கிய சிவசங்கர் பாபா, வழக்கில் திமுக அரசு விரைந்து செயல்படாமல் தாமதப்படுத்தியதன் மர்மம் என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும்,’’ என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி அறிக்கையில் கூறியுள்ளார்.

‘பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் யாரையும் விட மாட்டோம்’ என்று தமிழக அரசு நேற்று உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. திருவண்ணாமலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ம் தேதியன்று இரு காவலர்களால் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட வழக்கில் இது வரை திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவில்லை என்றும், சட்டப்பிரிவு BNSS 346(1) ன் படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இரு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து வைக்க வேண்டியது கட்டாயம் என்றும், இது போன்ற வழக்குகளின் விசாரணையை இரு மாதங்களுக்குள் முடித்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதியரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வில் மனுதாரர் கேட்டுக்கொண்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதால் மட்டுமே விசாரணையை நிறுத்தி வைப்பது முறையல்ல என்றும் தினசரி அந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிற அதே வேளையில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வழக்கை காலதாமதம் செய்பவர்களை கண்டித்து விரைந்து விசாரணை நடத்தி உரிய காலத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உள்ளது.

செங்கல்பட்டில் 'சுஷில் ஹரி' என்ற பெயரில் இயங்கி வந்த பள்ளியில் கடந்த 2020ம் ஆண்டு சிவசங்கர் பாபா என்ற போலி சாமியார் மீது 11 POCSO போக்ஸோ வழக்குகள் பதியப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் ஆறு வருடங்களாக விசாரணை நடைபெறவில்லை என்பது மாநில அரசின் நீதித்துறையின் அலட்சியத்தை, காவல்துறையின் மெத்தனத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. அந்த பள்ளியில் பயின்ற பல பெண் குழந்தைகள் மீது (ஆறாம் வகுப்பு குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு குழந்தைகள் வரை) பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த சிவசங்கர் பாபா இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்பதோடு, அதே இடத்தில் உல்லாசமாக தன் ராஜாங்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. பல வருடங்களாக அந்த பள்ளியில் பயின்று வந்த பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபரின் மீது 2021 இல் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், திமுக ஆட்சியில் வழக்குகள் பதியப்பட்டு, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டாலும், புரியாத, அறியாத காரணங்களால், அன்றைய திமுக அரசின் மெத்தனப்போக்கால், அலட்சியத்தால் உரிய முறையில் வழக்கின் விசாரணை செல்லவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் திமுக அரசு விரைந்து செயல்படாமல் தாமதப்படுத்தியதன் மர்மம் என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் வேண்டுமென்றே நீதிமன்ற விசாரணைக்கு செல்லாது இருப்பது, சாட்சிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டது, சாட்சிகள் கலைக்கப்பட்டது என பல்வேறு காரணங்களால் இந்த வழக்குகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, 'ஆன்மீக குரு, நானே கடவுள்' என்றெல்லாம் போலி வேடமிட்டு பெண் குழந்தைகளை நாசம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 'காமுகன்' பிணையில் வெளிவந்து இன்றும் அதே இடத்தில் உல்லாசமாக இருந்து கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய ஆதாரங்களின் மூலம் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது காவல்துறை, மற்றும் மாநில அரசின் வழக்கறிஞர்களின் கடமை.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் இந்த வழக்கின் கொடூரத்தை கருத்தில் கொண்டு விசாரணையை விரைவில் நடத்தி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க உத்தரவிட வேண்டும்.

நாகரீகம் கருதி அந்த பள்ளியில் படித்த பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த அவலங்களை மீண்டும் பதிவிட்டு, மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு புண்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், இது குறித்து என் கண்டனங்களை பல முறை பதிவிட்டுள்ளேன்.

"பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் யாரையும் விட மாட்டோம்" என்று தமிழக அரசு நேற்று அளித்த உறுதியளித்துள்ளது உண்மையென்றால், இந்த வழக்குகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தர தமிழக முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்கள் முன்வருவாரா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.