அண்ணாமலை 
தமிழ் நாடு

கேசவ விநாயகம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது ஏன்? - அண்ணாமலை விளக்கம்!

Staff Writer

பாஜக பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கேசவ விநாயகம் பாஜகவில் நீண்ட காலம் சிறப்பாக பணியாற்றியவர், நிறைய தேர்தல்களை சந்தித்தவர். நல்ல மனிதர். கடுமையான உழைப்பாளி. எளிமையானவர்.

அவரை ஆர்எஸ்எஸ் சங்கம் பாஜகவுக்கு கொடுத்திருந்தது. தற்போது ஆர்எஸ்எஸ் சங்கத்திற்கு அனுபவம் வாய்ந்த நபர் இல்லாததால் கேசவ விநாயகத்தை திரும்ப பெற்றுக் கொண்டது. அவர் இங்கிருந்து புதிய பொறுப்புடன் ஆர்எஸ்எஸ்ஸுக்கே சென்றுள்ளார்.

அவர் ஆர்எஸ்எஸ் பிரசாரகர், அவர் அரசியல்வாதி அல்ல. கர்நாடகா,கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கூட அமைப்பு பொதுச் செயலாளர்கள் இல்லை. எனவே தேவையில்லாமல் கேசவ விநாயகம் மீது எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த வேண்டாம். அதேபோல் எனக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே எந்த பனிப்போரும் இல்லை.” என்றவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிடாதது ஏன்? எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடாது என அவர் அவ்வளவு தாமதங்களை செய்தார்.

மாநில அரசின் எந்த ஒத்துழைப்பும் இன்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. எத்தனையோ முறை மதுரைக்கு சென்ற முதலமைச்சர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டிருக்கலாமே? மரங்களை வெட்டவோ, நிலம் கையகப்படுத்தும் பணிக்கோ எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.