மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத்தொகை வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சிறப்புத் தொகை பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டதுமே, அ.தி.மு.க., த.வெ.க. தலைவர்கள் இந்த ஆண்டில் மட்டும் ஏன் சிறப்புத்தொகை என்று கேட்டனர். தேர்தலை முன்னிட்டே இதை அறிவித்துள்ளதாக அவர்கள் சாடினார்கள்.
இந்த நிலையில் சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்னை குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் பேசினார்கள். பா.ஜ.க. குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதைப் பற்றிக் கேட்டதற்கு, பிரதமராக மோடி வருவதற்கு முன்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 இலட்சம் வங்கியில் போடுவதாகச் சொன்னதைப் பற்றிப் பேசிவிட்டு இதைப் பேசலாம் என்றார்.
சட்டப்பேரவையில் அந்தப் பரபரப்பான விவாதத்தை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், இனி ஆண்டுதோறும் கோடை காலத்தில் மகளிருக்கு சிறப்புத்தொகை வழங்கப்படும் என்று பதில்கூறினார்.