நடிகர் இரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் இன்று முற்பகல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவரிடம், விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல், நடிகர்களின் வாகனங்களின் பின்னால் சென்று இளைஞர்கள் உயிரிழக்கும் அளவுக்கு ஆபத்துக்கு உள்ளாகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு இரஜினி, ”இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அடிபட்டால் அவர்களுக்குதானே காயம் ஏற்படுகிறது. அவர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.” என்று வலியுறுத்திக் கூறினார்.
மேலும், ”படிக்கிற தருணத்தில் படிப்பில் மட்டும்தான் முழு கவனமும் இருக்கவேண்டும். அந்த இடத்தை, அந்த நேரத்தை அவர்கள் விட்டுவிட்டால் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்து படிப்பில் மட்டும்தான் அவர்களின் சிந்தனை இருக்கவேண்டும்.” என்றார் இரஜினி.
”தயவுசெய்து குடிப்பழக்கம், கஞ்சா இதிலெல்லாம் அடிமை ஆகாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் வாழ்க்கையே கெட்டுப்போயிடும். உங்க தாய் தந்தை சகோதரர்கள் என குடும்பத்தையே நரகமாக ஆக்கிவிடுகிறீர்கள். இப்படிப்பட்ட நட்பு கிடைத்தால் அவர்களிடம் கிட்டக்கூடப் போகாதீர்கள்; தூர இருங்கள்.” என்றும் இரஜினிகாந்த் கூறினார்.