பெ.சண்முகம், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் 
தமிழ் நாடு

மின் கட்டண உயர்வைக் கைவிட சிபிஎம் சண்முகம் அழுத்தம்!

Staff Writer

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 காசு முதல் 41 காசு வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று அதன் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஏற்கனவே ஒன்றிய பாஜக அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கம், கொரோனா பேரிடர் பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு மற்றும் தமிழக அரசின் முந்தைய மின் கட்டணம், நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பணிபுரிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பஞ்சாலை, இன்ஜினியரிங், ஆயத்த ஆடைகள் என பல நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாமல் மூடும் நிலையில் உள்ளன.  இந்நிலையில் தமிழக அரசு வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதானது, சங்கிலித் தொடர் போல அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும். அந்த சுமைகள் அனைத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமத்தப்படும்.” என்று தங்கள் கட்சி சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். 

”வீடுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு ஏற்றுக்கொண்டதால் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவிகித கட்டண உயர்வை அமல்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்த்தப்படும் கட்டண உயர்வுகள் தற்போது உயர்த்தியுள்ள கட்டணங்களுடன் சேர்த்தே உயர்த்தப்படும். இதனால் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்படும். மேலும், மாதந்தோறும் மின் அளவீடு எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

எனவே, மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், மாதந்தோறும் மின் அளவீடு எடுப்பதற்கான உத்தரவை வெளியிடுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” என்றும் பெ.சண்முகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.