பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம்- பிரதமருக்கு எடப்பாடி பாராட்டு!

Staff Writer

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்திய அரசு செய்துகொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்காக பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இன்று காலையில் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “சமீபத்தில் நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றி.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.