காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45ஆவது கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இக்கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினர் -அரசுச் செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் - பன்மாநில நதிநீர்ப் பிரிவுத் தலைவர் இரா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இவர்கள் கலந்துகொண்டார்கள்.
தமிழ்நாட்டின் சார்பில் பேசிய உறுப்பினர், ”தற்பொழுது (05.11.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 89.741 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,401 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 18,427 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, வரத்து கணிசமான அளவு தொடர்ந்து அதிகரிப்பதாலும், தமிழகத்திற்கு 2025, நவம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 13.78 டி.எம்.சி. நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறும் அவர் ஆணையத்தை வலியுறுத்தினார்.