ஜிஎஸ்டி 
தமிழ் நாடு

சிறு வணிகர்களை முடக்க வாடகைக்கு 18% ஜிஎஸ்டியா?

Staff Writer

சிறு வணிகர்களின் வாழ்வை முடக்கும்வகையில் கடை வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பதா என மத்திய அரசுக்கு சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. 

”பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதையும், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமலாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23ல் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 

”மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும். ஏற்கனவே கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுகிற ஆபத்தைக் கொண்டது.” என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். 

”கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டும்.” எறும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.