தமிழ் நாடு

ஜூலை 18- தமிழ்நாடு நாள் போட்டிகள் அறிவிப்பு!

Staff Writer

ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டியை தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.  

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட 2022ஆம் ஆண்டு மாநில அரசு தீர்மானித்தது.

தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். அதில் முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படுவதுடன், முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநிலப் போட்டி நடத்தப்படும். 

மாநிலப்  போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு சூலை 18ஆம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டில் சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 04.07.2025 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10,000/- இரண்டாம் பரிசு ரூ. 7,000/-, மூன்றாம் பரிசு ரூ. 5,000/- ஆகியவற்றுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவார்கள்.